Wednesday, December 28, 2011

ரீபோக்கும் பூமரும்


1
"அப்பா அந்த சூயிங்கம் வேணும்!"
"அது உடம்புக்கு கெடுதல் டா செல்லம்!"
"அதெல்லாம் இல்லை! தோனியே அந்த சூயிங்கம் போட்ட அப்புறம் தான் சிக்சரே அடிக்கிறார்! எனக்கு வேணும்!"
"அதெல்லாம் விளம்பரம்டா கண்ணா. சும்மா! அதை எல்லாம் நம்பக்கூடாது!
ஹீம்! ஹீம்! பபிள்கம் வேணும்!"
அடி! வாயை மூடு!"
2
"மச்சி! நம்ம செட்டில் முதல் முதலா ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி ஷீ வாங்கி இருக்க கலக்கல் மச்சி!"
"மக்களின் வாழ்க்கை தரம் உசந்துடுச்சுடா! சும்மாவா சொன்னாங்க நுகர்வோர்களின் வாங்கும் திறன் அதிகமாயிடுச்சுனு!"
"டேய்! எத்தனை தடவை சொல்லியிருக்கேன் குப்பையை தூக்கி ஜன்னல் வழியா கீழப் போடேதுன்னு!"
"மூவாயிரம் ரூவாய்க்கு ஷீ வாங்கி இருக்கேன்! இந்த பொட்டிய தூக்கி கீழே விசிறலேன்னா அப்புறம் என்னடா கெத்து! சும்மா இரு! குப்பை தானே!"
"சரி! நாம படத்துக்கு போலாம் வா! டைம் ஆயிடுச்சு!
புது ஷீ! புது படம் கலக்குற மச்சி பிரமாதம்!"
3
"என்னாச்சுடி புள்ளைக்கு! ப்ளாஸ்திரி எல்லாம் போட்டு இருக்கு?
வெளியதாங்க விளையாடிட்டு இருந்தான். தீடீர்ன்னு சத்தம் போய் பார்த்தா கீழே விழுந்து கிடக்கான்!"
"எப்படி திடீர்னு விழுவான்? அவன் என்ன நடக்கத் தெரியாத குழந்தையா?
எவனோ ஷீ பொட்டிய தூக்கி வீசியிருக்கான்! அதுல இருந்த பிளாஸ்டிக் கவர் மேல காலை வைச்சு வழுக்கி விழுந்துருக்காங்க"
"சே! அறிவு கெட்ட ஜென்மங்க! ஏன் கண்ணா ரொம்ப வலிக்குதா?"
"ஆமாப்பா! ஹீம் ஹீம்!"
"சரி வா! வெளிய போலாம்! அப்பா உனக்கு சூயிங்கம் வாங்கித் தரேன்!"
4
"செம படம் இல்ல மச்சி!"
"ஆமாடா!"
"வா அப்படியே பீச்சுக்கு போயிட்டு சாப்பாட்ட முடிச்சுட்டு ரூமுக்கு போலாம்!"
"சே! பாக்கெட்டுல எவ்வளவு குப்பை! பார்க்கிங் டிக்கெட்! சினிமா டிக்கெட்!"
"டேய் எத்தனை தடவை சொல்றது குப்பையை எல்லாம் கண்ட இடத்துல விட்டெறியாதன்னு!"
"போடா திருத்த வந்துட்டான் விவேகானந்தன்."
5
"ஹய்யா! பபிள்கம் சூப்பரா இருக்குப்பா!"
"கால் ரொம்ப வலிக்குதாப்பா!"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை! இங்க பாக்குரியா நான் எவ்வளவு பெரிய முட்டை விடுறேன்னு!"
"ஹய்யோ! எவ்வளவு பெரிசு! சரி விளையாடினது போதும்! பபிள்கம்மை துப்பிட்டு வா! நாம ஜாக்கிசான் கார்ட்டூன் பாக்கப் போகலாம்!"
"இன்னும் கொஞ்ச நேரம்பா! ப்ளீஸ்!"
"வேணாம்டா சொன்னா கேக்கனும் இல்ல! அப்பதான் அப்பா நாளைக்கும் வாங்கித் தருவேன்!"
"பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூச்ச்ச்ச்ச்! ஹய்யா எவ்வளவு தூரம் போச்சு பாத்தியா?"
"அட! ஆமாம்! நாளைக்கு இதை விட தூரமா துப்பலாம் வா!"
6
"சே! பீச்சுக்கு வாலைன்டேன்ஸ் டே அன்னிக்கு போகவே கூடாதுடா!"
"கரெக்டா சொன்னே! நான் உன் மூஞ்சியபாத்துட்டு! நீ என் மூஞ்சியபாத்துட்டு! எத்தனை நாளைக்கு தான் இப்படியே…."
பச்சக் பச்சக் பச்சக்
"என்னடா குனிஞ்சு பாக்குற!"
"இல்ல! என்னமோ ஷீவில் என்னவோ ஒட்டினா மாதிரி இருந்துச்சு! இருட்டுல வேற என்னன்னு தெரியல! லைட்ட போடு"
"ஒரு ஷீவை வாங்கிட்டு இன்னும் பேங்க் லாக்கரில் தான் வைக்கல!
காலையில் எழுந்து பாத்துப்போம் விடு!"
"டேய்ய்ய்ய்! நான் நேத்து நைட்டே சொன்னேன் இல்ல! இங்கப் பாரு எவனோ சூயிங்கம்மை தின்னுட்டு படியில துப்பி இருக்கான்! அதைத் தான் மிதிச்சு இருக்கேன்!"
"அச்சோ! புது ஷூவிலா டா?"
"அடப் போடா! இப்போ காஞ்சு வேற போச்சு! சுரண்டி எடுத்தா பேஸ் வேற நாஸ்தி ஆயிடும்! சே!"

7
"என்னடா பழக்கம் இது? எப்பப் பாத்தாலும் எல்லாத்தையும் தூரத்துல துப்பிகிட்டு?"
"அடப் போம்மா! இதுக்கே இப்படி சொல்ற! நேத்து நான் பபிள் கம்மை எவ்ளோஓஓ தூரம் துப்பினேன் தெரியுமா அப்பாகிட்ட கேட்டு பாரு!
என்னங்க இது?"
"அட விடுடி! ஒரு ரூபாயுக்கு கம் வாங்கி இருக்கேன்! அப்படி துப்பலைன்னா என்ன சந்தோசம்! சும்மா இரு! குப்பை தானே….."

Saturday, December 3, 2011

பிச்சைக்காரன்



அவன்! மரியாதை இல்லாமல் தெரிந்தாலும் அவனை அப்படி குறிப்படுவதுதான் சரி. அவன் மேல் இருக்கும் அந்த ஈன உணர்வு தான் அவனுடைய பலம்.

ஆதவனை நம்பி ஆயிரம் கோடி பேர் இருந்தாலும் தன் முதல் ஒளியை அவனிடம் அனுப்பி அவன் முகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த பின் தான் மற்றவருக்கு தன் ஒளியைக் கொடுக்கிறான்.

அவனது வீடு விலாசம் இல்லா விசால எல்லையுடையது. எண்ணிக்கை இல்லா அறைகள். ஒரு இரவு அவன் தூங்கிய அறையில் அடுத்த நாள் அவன் நுழையும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு!

துயில் கலைத்து, தன் காவல் நாய்களை அப்புறப்படுத்திய பின் தன் உத்தியோகமான உதவி வேண்டுதலை செய்ய தன் முதலாளிகளை தேடிச் செல்ல ஆயத்தம் செய்கிறான். தன் வேண்டல் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் எப்போதும் சோகமுகத்துடனும் அழுக்காடைகள் உடனும் இரத்தலைத் தொடங்குகிறான்.

காலை உணவு தேவையென வயிறு அவனிடம் இரந்தபின் வசந்தம் உணவகம் நோக்கி தன் பயணத்தை செலுத்துகிறான். இந்த தெருவுக்கே முதலாளியான இவனைக் கண்டவுடன் உணவக முதலாளி கல்லாவுக்கு வரவு இல்லாமல் வந்த இந்த வாடிக்கையாளனுக்கு ஒரு பொட்டலம் மடித்து தயாராகவே வைத்திருக்கிறார்.

சிற்றுண்டி உண்டவுடன், அகிலத்தை ஆளும் ஈசன் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி அவன் பயணம் தொடர்கிறது. ஆலயத்துக்கு செல்வது படமாடும் தெய்வத்தை வேண்டி தன் துன்பம் விலக்க அல்ல. நடமாடும் தெய்வங்களை ஈந்து தன் தனம் பெருக்க. உலோகம் ஓட்டை உரசுகிறது

மனகனத்தை இறக்கி வைத்தவர் இவன் கனத்தை ஏற்றிய பின் கனம் அனைத்தும் தன் மீது கொண்ட ஈசன் மதிய துயில் கொள்ள வேண்டுவதால் அங்கிருந்து நகர்ந்து அன்னப்பூரணி உணவகத்தை அடைகிறான். கண்டவுடன் அனைவரும் விலகி ஒதுங்க கல்லாப் பெட்டியின் பாதுகாவலர் அலுப்புடன் இவனை நோக்க தன் தலை சொறிந்து இறை தரிசனத்தை நெடுநேரம் கொடுத்தபின் அன்னலஷ்மி இவனுக்கும் அருள் பாலிக்கிறாள்.

அன்னலஷ்மியையும், தனலஷ்மியையும் தன் கிழிந்த கிழியாத என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையில் இருக்கும் தன் துணி கஜானாவில் பாதுகாத்து வளநாடு பூங்காவுக்கு உலா செல்கிறான். அன்னலஷ்மியை தரிசித்துவிட்டு, தன் தனத்தையெல்லாம் சரிபார்த்தபின் அருகில் இருக்கும் அந்தப் பேருந்து நிலையம் நோக்கி அவன் கால்கள் செல்கின்றன.

அலுவல்கள் முடித்து வீடு திரும்பும் மக்களிடம் சோர்ந்த விழிகாட்டி, கிழிந்த உடைகாட்டி அவர்கள் மனிதநேயத்தை உரசிப்பார்க்கிறான். 

உலோகத்தின் சங்கீதம் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
மனிதத்தை போதுமளவு என்று நோக்கியபின் மீண்டும் ஈசன் வீட்டின் வாசலுக்கே வருகிறான். ஈசன் உண்டி நிரப்பி வெளிவருவோர் சிலர் இவன் உண்டிக்கும் உதவுகின்றனர். ஆண்டவன் அருள் விற்று வியாபாரம் மூடிய பின், பீடி வியாபாரம் செய்யும் கடைக்குச் சென்று அவன் வியாபாரத்துக்கு உதவுகிறான். இங்கு அவன் சோர்ந்த விழிகளோ, கந்தலாடையோ, சுருங்கிய தேகமோ, அவன் சிரிப்பில் தெரியும் இறைவனோ உதவவில்லை. உலோகமும் காகிதமும் தான் உதவுகின்றன. வாழையிலைக்குத் தான்  வாழ்த்துக்கள் தேவை புகையிலைக்கு எதற்கு புண்ணியமெல்லாம்?

இவன் வீட்டின் உச்சியில் இரவு வெளிச்சத்துக்கு தொங்கவிடப்பட்டிருக்கும்
சந்திரனும் நட்சத்திரங்களும் ஒருங்கே ஒளி வழங்க ஈன்ற செல்வத்தைக் கொண்டு வாங்கிய சாராயத்தையும் குடித்து விட்டு அடுத்த நாளைக்கான அலுவல்களை மனதில் அசைப் போட்டபின் நித்ரா தேவியிடம் சரண் புகுகிறான் அந்தப் பிச்சைக்காரன்.

Wednesday, November 16, 2011

காய்ச்சல்


”மேற்கே உதித்த சூரியனே உன்னை கிழக்கே உதிக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடையும் என்றால் தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்.”

06:00 A.M

”Snooze” “Cancel”

Snooze என்ற இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பை பாராட்டும் விதத்தில் அதை அழுத்திவிட்டு மீண்டும் தலை தலையணையோடு சேர்ந்தது.
”மேற்கே உதித்த சூரியனே உன்னை கிழக்கே உதிக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடையும் என்றால் தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்.”

06:05 A.M

”Snooze” “Cancel”

ஐந்தாண்டுக்கு ஒருமுறை பொத்தான் மாற்றி அமுக்கும் கை அல்லவா இது! ஐந்து நிமிடம் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே இம்முறை “Cancel”.
ஆதவன் பனி விலக்கி, இந்திய ஆட்சியாளர்கள் (தமது) வறுமை விலக்கி, இந்த வரிசையில் நானும் போர்வை விலக்கி எழுந்தேன்.

இல்லை. இப்படி கை ஊனி முதுகு மட்டும் நிலத்தில் இல்லாமல் மற்ற பாகங்கள் யாவும் நிலத்தில் இருக்கும் தன்மைக்கு அமர்தல் என்றுதானே சொல்வார்கள். அப்புறம் ஏன் எழுந்துவிட்டேன் என மூளை நினைக்கிறது?

இதென்ன இடுப்பில் ஒரு வலி! மறுபடியும் இல்லை! முதுகில் அல்லவா வலி! இப்படி பல இல்லைகளுக்குப் பின் தெரிந்தது உடல் முழுவதுமே வலிக்கிறது என்று. இதைப் புரிந்து கொள்ள என் மூளைக்கு ஏன் இவ்வளவு நேரம் எடுத்தது என யோசித்த கணத்தில் ஒரு நியூரானின் SMS மூளையை எட்டியது. என் கை என் கழுத்தை நோக்கி சென்றது. 


இவ்வளவு நேரம் கனவில் உணர்ந்த “அவள்” உடல் உஷ்ணம் என்னுடலில் உணர்ந்தேன் இப்போது. அவளே அருகிலிருந்தால் தேவலை என்றிருந்தது. மற்ற நேரங்களை விட, உடம்புக்கு ஏதாவது ஒன்று வரும்போதுதான் உடல் பொதியும் சூட்டைத் தரும் ஒரு அரவணைப்பை நாடுகிறது மனம்.

பால் வைத்து induction stove சரியாக வேலை செய்கிறதா என இரண்டு நிமிடம் கழித்து பாத்திரத்தை தொட்டது போல் இருந்தது. இரவு கூட கதவை எல்லாம் அடைத்துவிட்டுதானே படுத்தேன். இப்போதும் அதே நிலையில் தானே அவை இருக்கின்றன. பின் எப்படி என் வீட்டுக்குள்ளும் கூட்டுக்குள்ளும் வந்தது இந்த காய்ச்சல்.

”டேய்! காபி வேணுமா” அன்புத் தம்பியின் குரல். “போய் பல்லைத் தேச்சுட்டு வா”

சற்று சுதாரித்து எழுந்து காபி குடிப்பதக்கு முன் செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் முடித்த பின் காபி எடுக்கும் போது என் நடவடிக்கைகளைப் பார்த்த தம்பி “என்னாச்சுடா ஒரு மாதிரி இருக்கே” என்றபடி அதே கழுத்தை தொட்டு அதே பால் சூட்டை அனுபவித்தான்.

“டேய்! ஜீரம் அடிக்குது டா. என்னப் பண்ணி தொலைச்ச? அம்மாவுக்கு போன் பண்ணட்டுமா” என்ற அவனின் கேள்விக்கணைகளை ஒரே முறுவலிப்பில் மறுத்து, டம்பளரில் இருந்து வாய் நகர்த்தினேன்.

அம்மாவுக்கு தொலைபேசி என்றவுடன் கேப்டன் படம் வரும் போது ரிமோட்டை பிடுங்குவது போல அலைபேசியை அவனிடம் இருந்து கவர்ந்தேன்.

“ஒன்னும் இல்லை! மாத்திரை போட்டால் சரியாகிவிடும்” என்ற ஒற்றை வரியில் மறுத்தேன். அதிகம் பேசினால் வார்த்தை வளரும். அவனுக்கு பதில் சொல்ல முடியாது. முக்கியமாக அம்மாவுடன் அரை மணி நேரம் அலை பேசியில் அம்மாவின் அழுகையையும், புலம்பல்களையும் கேட்க முடியாது என்ற எண்ண ஓட்டத்தில் குறுக்கே வந்தது அந்த தும்மல்.

“சளி வேறையா! வா ஏழு மணிக்கு டாக்டர் வந்துடுவார் பார்த்துடலாம்”.

”யாருக்கு டாக்டர்?” என்றபடி காதில் அலைபேசியுடன் நுழைந்தாள் என் தங்கை. மறுமுனையில் அம்மா. அடுத்த அரைமணி நேரத்துக்கு என்ன நடந்தது என நிச்சயம் இங்கு எழுதப் போவதில்லை.

”டாக்டரை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை cold act ஒன்று வாங்கித் தருகிறேன்” அத போட்டுக்கோ என்றான் தம்பி.

“அதெல்லாம் பத்தாது! கூட calpolஉம் போட்டுக்கோ” தங்கை.
சோனியாவுக்கு முன் அமர்ந்திருக்கும் மன்மோகன் போல பேசாமல் மையமாக தலையாட்டி வைத்தேன்.

”Hi Gd mg! Nt cmg to office 2day. Down with fever” என்ற sms என் மேலாளருக்கு மட்டுமில்லாமல், அலுவலக வாகனத்தில் எனக்கு முன்னால் வருபவர், அடுத்து வருபவர் என சகலமானவர்களுக்கும் அனுப்பினேன். Calpol மட்டுமே மாத்திரை என்ற பெயரில் சாப்பிட்டேன். அம்மாவிடம் ”டாக்டரை பார்த்து வந்தேன். சாதாராண காய்ச்சல் இரு நாட்களில் சரியாகிவிடும் என்றார்” என்ற பொய்யோடு அந்த நாள் முடிந்தது.

அடுத்த நாள் பெரிதாக எதுவும் வலியில்லை! ஜூரம் மட்டும் நவநாகரீக இளைஞர்களின் பேச்சில் இருக்கும் தமிழ் போல லேசாக ஒட்டிக்கொண்டிருந்தது.

அலுவலக பார்க்கிங்கில்...

”ஹேய்! என்ன நேத்திக்கு காணோம். Extended week endஆ” என்ற நண்பரிடம் காய்ச்சல் பற்றி சொன்னேன்.

“டாக்டர் கிட்ட போனியா? ஒரே நாளில் வந்துட்ட? அப்படிதான் இப்ப அடிக்காத மாதிரி இருக்கும். சளி இருக்கா? ஒழுங்கா டாக்டர பாத்துடு ஏதாவது பெரிசா வந்துடப்போகுது” என்றவனிடம் இம்முறை அம்மா முன் தலையசைக்கும் OPS மாதிரி வேகமாக தலையசைத்து சென்றேன்.
மின்னஞ்சலில் ஒன்றும் பெரிதாக இல்லை! மாதத்தின் இடையில் இருப்பதால் வழக்கமாக வரும் கணைகளைத் தவிர ஒன்றும் இல்லை. பிரம்மாஸ்திரம் எல்லாம் மாதக் கடைசியில்தான் என்றபடி மகிழ்ந்திருக்க மேனஜரின் IM status online என்றது.

விடுமுறை முடிந்து வந்தால் மேனஜர் முதலில் பார்க்கும் ஆள் நீயாகத்தான் இருக்கவேண்டும் இல்லையெனில் ஆன்லைனில் இருந்தாலும் “R u taking off today?” என்றொரு SMS பாலஸ்தீனத்தைக் கண்ட இஸ்ரேலின் ஏவுகணை போல பறந்து வரும்.
மேலாளரைக் கண்டு பரஸ்பர நலவிசாரிப்புகளுக்குப் பின்....

“அலட்சியமா இருக்காத! இப்படித் தான் என் பையனுக்கு சாதா ஜீரம் மாதிரி ஆரமிச்சுது. விட்டு விட்டு வந்தது என அலட்சியமாக இருந்துட்டோம். கடைசியல டைஃபாடில் கொண்டுவிட்டது. Cold வேற இருக்கு ஒழுங்கா டாக்டர போய் பார்த்துவிடு” என்று சிவாஜியில் ரஜினியை மந்திரியை நோக்கி துரத்தும் அரசாங்க அதிகாரிகள் போல விரட்டினார். நானும் அமெரிக்காவை கண்ட இந்தியா போல இம்முறை பலமாக தலையாட்டிவிட்டு வெளியே வந்து வேலையைத் தொடங்கினேன்.

“என்னடா சீக்கிரம் வந்துட்ட? நேற்று வேற லீவு? என்னாச்சு?” என்றார் பக்கத்து சீட்டு பெரிசு.
இவர் தாமதமாக வந்த செய்கையை நான் சீக்கிரமாக வந்ததாக கருதும் lateral thinking மனதுக்குள் பாராட்டிய பின் காய்ச்சல் கதை மறுபடி சொல்லப்பட்டது.

“தலை வலி இருக்கா? இல்லேனா கூட பரவாயில்ல. உடனே Blood test எடுத்துடு. ஊருக்குள்ள ஏதோ பேர் தெரியாத வைரஸ் காய்ச்சல் பரவுதாம். இப்படித் தான் என் தம்பி பையனுக்கு ஜீரம் மாதிரி ஆரமிச்சுது. உன் வயசுதான் இருக்கும். கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டாங்க சிக்குன் குனியாவாம். கிட்டதட்ட மூணு மாசம் படுக்கையில கிடந்தான். இப்பத்தான் சரி ஆச்சு! ஆளு அரையாளு ஆயிட்டான். பாத்துக்கோ அவ்வளவுதான் சொல்ல முடியும்.” என்று சொல்லிவிட்டு எதிர் சீட்டுக் காரரிடம் தன் பேச்சைத் தொடங்கினார்.

பதினொரு மணி காபிக்கு Pantry நோக்கி நகர்ந்தேன்.

அங்கு பக்கத்து டீமில் இருக்கும் அந்த நண்பர் வழக்கம் போல் நேற்று நான் வராததன் காரணம் கேட்க நான் காய்ச்சல் கதை மூன்றாவது முறையாக சொன்னேன். எத்தனை முறைதான் இதே ரீலை ஓட்டுவது?!

“தோ பாரு! யாருக்கு சம்பாதிக்கிற? உன் உடம்பை நீ தான் பாத்துகனும், சுவர் இருந்தாத் தான் சித்திரம் வரைய முடியும். அப்புறம் என்னமோ சொன்னானே? ஹ்ம்ம், இன்னும் ரெண்டு நாளைக்கு மிளகு ரசம் மட்டும் சாப்பிடு. நான் சொல்லும் கடையில் ஒரு பொடி வாங்கி தினம் மூனு வேளை சாப்பிடு. ஜலதோசத்துக்கு ஆவி பிடி. சித்த வைத்தியத்துல இல்லாததே கிடையாது. கெமிக்கல போட்டு நிலத்த தான் கொன்னுட்டாங்க உன் உடம்பையும் கொன்னுடாத. Paracetamol மாத்திரை சாப்பிட்டா கிட்னி சீக்கிரம் வீணாயிடும் தெரியுலில்ல? இன்னிக்கு வீட்டுக்கு போகும் போது என் கூட வா நான் மருந்து வாங்கித் தரேன்” என்று வேறொரு நாட்டில் குண்டு போட்ட பின் ஒன்றுமே தெரியாமல் போகும் அமெரிக்கா போல அமைதியாக அவ்விடத்தை விட்டு அகன்றார்.

மதிய உணவுக்கு சென்ற போது இன்று அலுவலக cabஇல் வராதவர் சிரித்தார்.
“ஜீரம்னு சொன்னிங்க போல! இப்ப எப்படி இருக்கு?” என்றார்.

மறுபடியும் சியர்ஸா என நான் மனதில் நினைத்தது அவருக்கு கேட்டிருக்க வேண்டும்! ஆனால் அவர் எந்த அறிவுரையும்(திகிலுரை?) சொல்லாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார். ஆஹா! மீதி சில்லறையான ஐம்பது பைசாவை திருப்பி கொடுத்த பேருந்து நடத்துனரை பார்ப்பது போல அவரைப் பார்த்து வியந்தேன்.

ஆனால் முகமது கோரியைப் போல எதிர்பாராமல் தடால் என்று வந்தார்.

“இந்தாப்பா! இது என் பேமலி டாக்டரோட கார்டு இவரை இன்னிக்கே பாரு அமெரிக்கா ரிட்டன். ஏன் சொல்ரேன்னா என் பக்கத்துவீட்டு பையனுக்கு ஆறு மாசம் முன்னாடி இப்படித்தான் ஒரு காய்ச்சலில் ஆரமித்தது. கவனிக்கமா விட்டதுல சளி நுரையீரல்ல ஏறி, தலையில் வேறு கட்டிக்கொண்டு ஆபரேசன் எல்லாம் பண்ணாங்க கடைசியில் போய் சேந்துட்டான். ஒன்னும் பண்ண முடியல.”

“கொய்யாலே... சாதா காய்ச்சல் தானேடா... ஏண்டா ஏன்?” மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். வழக்கமாக அழகான பெண்களை கண்டால் கண்ணுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறந்தது.

“பயமுறுத்திரேன்னு நினைக்காத! உனக்கு சைனஸ் எல்லாம் இல்லேல்ல. அது இருந்தா அவ்வளவு தான். பணங்காசு போனா வரும் உயிர் போனா?”.
நேராகச் மேலாளரிடம் சென்றேன். ”டாக்டர பாக்கனும் ஒரு ஆஃப் டே பர்மிசன் வேணும்.”
பேருந்து நிலையம் வந்து நின்றவுடன் எனைக் கண்ட தோழி போல 29C ஓடோடி வந்தது.

. “ஜெமினி ஒன்னு”.

ஜெமினி சிக்னலில் இறங்கி இருபது நிமிட நடை. அந்த கட்டிடம் முன் நின்றேன். பணம் இருக்கிறதா என்று பர்சை திறந்து பார்த்தேன்! 100 எண்ணுக்கு பக்கத்தில் இரண்டு மூன்று காந்திகள் என்னை பார்த்து புன்னைகைத்தார்கள். பதிலுக்கு புன்னகைக்க நேரம் இல்லை.”
நேரம்: 01:30

”அண்ணே! Tintin டிக்கெட் இருக்கா”

“இருக்கு”

“எத்தனை மணிக்கு ஷோ?”

“01:45”.